மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

செல்ஜுக்குகள் வரலாறு 6



 இரண்டாம் கியா ஸுத்தீன் கெயுஸ்ரெவ் மரணமடையும் போது வெவ்வேறு தாய்க்குப் பிறந்த மூன்று இளைய பிள்ளை களை விட்டுச் சென்றார். இதனால் செல்ஜுக் பேரரசை முறையாக ஆளத்தகுதி யான ஆட்சியாளர் இல்லாமல் போனது. இந்த நிலைமையில் செல்ஜுக் பேரரசு தானாகவே இல்கானித் மங்கோலிய ஆட்சியின் நிர்வாகத்தின் கீழ் சென்றது. இரண்டாம் கியாஸுத்தீன் கெயுஸ்ரெவின் மூன்று பிள்ளைகளின் சச்சரவால் செல்ஜுக்குகளின் பேரரசு மேலும் பலவீனமானது. இறுதியில் மூவரும் சேர்ந்து தனித்தனியாக பிரித்து ஆள்வது என்று முடிவானது. 1249 ல் இடையில் துணை மந்திரி செலாத்தீன் கரடாய் என்பவர் அரசியல் தரகராக செயல்பட்டு சகோதரர் களுக்கும், மங்கோலியர்களுக்கும் இடையில் ஒரு ஆட்சி நிர்வாக ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். அதன்படி மூன்று சுல்தான்களும் இணைந்து கையெழுத்திட தனித் தனி மாகாணம் பிரிக்கப்பட்டு மூன்று பேரும் மங்கோலிய கானின் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்து கொள்ளலாம். கொன்யா மற்றும் கிஸிலிர்மாக் ஏரியின் மேற்குப் பகுதி மூத்த மகன் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கும், சிவாஸும் கிஸி லிர்மாக் ஏரியின் கிழக்குப் பகுதி நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனுக்கும், மலத்யாவுக்கு அருகில் உள்ள பகுதி இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதுக்கும் என்று முடிவானது. மங்கோலிய கானிடம் எதையாவது பெறுவதென்றாலும், கேட்பதென்றாலும் மூவரும் மூன்று விதமாக அணுகினர்.
                         இந்த மூவர் ஆட்சி 1257 வரை நீடித்தது. இவர்களின் தந்தை யார் இரண்டாம் கியாஸுத்தீனிடம் பணியாற்றிய மந்திரி செம்ஸ் அத்தீன் இஸ்ஃப ஹானி என்பவர் மூவர் கூட்டணி ஆட்சிக்கும், மங்கோலிய கானுக்கும் இடையே பொதுவாக இருந்து பார்த்துக் கொண்டார். 1249 ல் மிகவும் திறமை வாய்ந்த இவர் கைது செய்யப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டார். அதேபோல் இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதும் 1257 ல் தனது பிரதேசத்தை ஆள விரும்பாமல் மங் கோலிய கானிடம் திருப்பிக் கொடுக்க முடிவெடுத்த போது எர்ஸுரும் என்ற இடத்தில் அவரின் உயர் அதிகாரியால் கொல்லப்பட்டார். இப்போது மீதி இரண்டு சகோதரர்களில் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் தாய் கிரேக்க வம்சாவழி ஆனதால், அவர் பைஸாந்தியர்களின் உதவியை நாடி மங்கோலிய கானை எதிர்க்க திட்டமிட்டார்.  நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலன் மொத்த பகுதிக ளையும் மங்கோலிய கானிடம் கொடுத்துவிட எண்ணினார். மேலும் இந்த சூழ்நிலையில் மந்திரி கரடாயிடம் ஆலோசனை பெற எண்ணினார். ஆனால்  எதிர்பாராத விதமாக கரடாய் இறந்து போனார். செல்ஜுக்குகளின் நம்பிக்கை தளர்ந்தது. மங்கோலிய கான் பேரரசை இரண்டாகப் பிரித்து சிவாஸை நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனுக்கும், தலைநகர் கொன்யாவை இரண்டாம் இஸ்ஸத் தீன் கெய்கவுஸுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
                           இதற்கிடையில் குறிப்பிடத்தக்க நபராக செல்ஜுக்குகளின் அரசியல் அரங்கில் நான்காம் ரூக்னத்தீன் கிலிக் அர்சலனின் பிரதம மந்திரி மொய்னுத்தீன் சுலைமான் நுழைந்தார். சுயசிந்தனையும், ஆள வேண்டும் ஆசை யும் கொண்ட அவர் எல்லா அரசியல் அதிகாரமும் தன் கையில் வர வேண்டும் என்று விரும்பினார். மங்கோலியர்கள் அப்பாஸிட்கள் வசமிருந்த பாக்தாதைக் கைப்பற்ற தங்களுக்கு சிரியா போருக்கு உதவ இரு இளவரசர்களுக்கும் உத்தர விட்டார்கள். 1261 ல் கான்ஸ்டாண்டிநோபிளைக் வெற்றி கொண்டு மைக்கேல் பலாயோலோகோஸ் என்பவர் பைஸாந்திய பேரரசின் மன்னரானார். இதனால் ஆர்வம் கொண்ட இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸும், மந்திரி மொய்னுத்தீன் சுலைமானும் உடனே கிரீமியா சென்று மைக்கேல் பலாயோலோகோஸிடம் மங்கோலியர்களுக்கு எதிராக போரிட ஒத்துழைப்பைக் கேட்டனர். இது இரண் டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸுக்கு எதிர்விளைவை ஏற்படுத்தியது. மைக்கேல் பலாயோலோகோஸ் இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸை சிறைப்படுத்தி 1278 ல் தூக்கிலிட்டுக் கொன்றார். தற்போது நான்காம் கிலிக் அர்சலன் மொத்த செல்ஜுக்குகளின் பேரரசுக்கும் ஆட்சியாளரானார். மந்திரி மொய்னுத்தீன் சுலைமான் உயர் பதவியாக சுல்தானின் அதிகார ஆலோசகராகவும், முதல் மந்திரியாகவும் அதிகாரம் பெற்றார். தூக்கிலிடப்பட்ட இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் மந்திரி சாஹிப் அடா எவ்வளவோ முயன்றும் தன் முந்தைய பதவியைப் பெற முடியாமல் மொய்னுத்தீன் சுலைமானின் கீழ் பணி செய்தார்.
                                    பதவி வெறிபிடித்த மொய்னுத்தீன் சுலைமானால் நான்காம் கிலிக் அர்சலன் விருந்தொன்றில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார். ஆட்சி நான்காம் கிலிக் அர்சலனின் இளைய மகன் வசம் சென்றது. திட்டப்படி பேருக்கு மகன் மன்னனாய் இருந்தாலும் மொய்னுத்தீன் சுலைமான் தான் ஆட்சி செய்தார். மொய்னுத்தீன் சுலைமான் சினோப் என்ற பகுதியின் மீது படையெடுத் துக் கைப்பற்றினார். அதை தனக்கான சிறிய ஆட்சிப்பகுதியாக ஆக்கிக்கொண் டார். தனது மூன்று வயது மகனை அந்த பகுதிக்கு சுல்தானாக அறிவித்துக் கொண்டார் மேலும் தன் வளர்ச்சிக்காக விதவையான இரண்டாம் இஸ்ஸத்தீன் கெய்கவுஸின் மனைவியை மணந்து கொண்டார். அவர் சிறிய மகன் இரண்டாம் அலாவுத்தீன் கெய்குபாதின் ஆட்சிப் பொறுப்பாளாராக இருந்தார். அந்த கால கட்டத்தில் இவ்வளவு அரசியல் சிக்கல் இருந்தாலும் முன்னேற்றத்திலும் சிறிது கவனம் செலுத்தப்பட்டது. கொன்யா, கைசெரி மற்றும் அன்டால்யாவில் செல்ஜுக் குகளின் பெயர் சொல்லும் வண்ணம் நிறைய கட்டிடங்களைக் கட்டினார்கள். குறிப்பாக மந்திரி கரடாய், மந்திரி சாஹிப் அடா கட்டிய டோகட் பாலம், மேலும் அக், ஓப்ருக், ஹோரோஸ்லு, சரி, இசக்லி அரணமனைகள் புகழ் பெற்றவை.
                                         நான்காம் கிலிக் அர்சலனின் மகன் மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாத் மன்னராய் இருந்த போது ஆறு வயது, இதனால் அவ ரின் ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த மொய்னுத்தீன் சுலைமானுக்கு சாதகமாகி  மொத்த ஆட்சி அதிகாரமும் தன் வசம் வைத்திருந்தார். மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாத் எதிர்காலத்தில் கொன்யாவைச் சுற்றியுள்ள பகுதியை மட்டும் உரிமை கொண்டாட முடியும். அடுத்த பத்தாவது ஆண்டில் மங்கோலியர்களின் கீழ் வழக்க மாக சுதந்திரமாக ஆளும் அதிகாரம் பெற்றார். 1276 ல் மொய்னுத்தீன் சுலைமான், எகிப்தின் மம்லுக் சுல்தானாகிய பைபருடன் கூட்டு சேர்ந்து மங்கோலியர்களை போரிட்டு ஆசியா மைனரை விட்டு விரட்டி தன்னை மங்கோலியர்களின் கீழில் லாத சுல்தானாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டார். அதன்படி மம்லுக்கின் பைபர் படை எடுத்து வந்து மங்கோலியர்கள் வசமிருந்த எல்பிஸ் டான், கைசெரி நகரங்களைக் கைப்பற்றினார். பின் பைபர் வெளியில் அறிந்து கொள்ள முடியாத சில காரணங்களால் போரிலிருந்து விலகி எகிப்து சென்று விட்டார். இதனால் மொய்னுத்தீன் சுலைமான் டோகத் என்ற இடத்தில் தனியாக விடப்பட்டு மங்கோலியர்களுக்கு எதிரான போர் திட்டத்திற்கு மொய் னுத்தீன் சுலைமானின் துரோகம் தான் காரணம் என்பது வெளிப்பட்டு அவரையும், உடனி ருந்த சிற்ப, கட்டிட கலை நிபுணரும், மந்திரியுமான சாஹிப் அடாவும் கொல்லப் பட்டனர்.                    
                                 மொய்னுத்தீன் சுலைமானின் மரணத்திற்குப் பிறகும் பேரரசின் குழப்பங்கள் தீரவில்லை. 1283 ல் மூன்றாம் கியாஸுத்தீன் கெய்குபாதும் மங்கோலியர்களால் கொல்லப்பட்டார். எவ்வளவு தான் குழப்பங்கள் இருந்தாலும் செல்ஜுக்குகள் கட்டிடம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தார்கள். கெசிக்கோப்ரு விலும், தூரக், ஓரெசின், எக்ரிட் மற்றும் கேயில் அரண்மனைகளும், பாலங்கள் அமைத்தார்கள். கைசெரியில் சாஹிபியே மதரஸா, சிவாஸில் கோக் மதரஸா, அஃப்யொன் உலு கேமியில் மதரஸா கட்டினார்கள். இவர்களால் விடப்பட்ட சிஃப்டி மினாரே மதரஸா, சிவாஸில் முஸ்ஸாஃபர் பருசிர்டி மதரஸா, அமஸ்யா கோக் மதரஸா மற்றும் அஃப்யோனில் டோரும்டாய் கோபுரங்களை மங்கோலியர்கள் முழுமையாக கட்டினார்கள்.
                                     எந்த நேரமும் குடும்பத்திற்குள் பதவிச் சண்டை, குழப்பங்களுக்கு மத்தியில் இறுதியாக இரண்டாம் மசூத் என்பவர் தன்னை கைசெரியின் சுல்தானாக அறிவித்துக்கொண்டார். அவரும் அவர் மகன் மூன்றாம் மசூதும் 1303 ல் கொலை செய்யப்பட்ட பிறகு, அனடோலியா(துருக்கி) செல்ஜுக்கு களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதேநேரத்தில் மங்கோலியர்களும் பலமும் மங்கத் துவங்கியது. அனடோலியா சிறு சிறு பகுதிகளாக உள்ளூர் ஆட்சியாளர் களாலும், எஞ்சிய செல்ஜுக்குகளின் அறியப்படாத குடுப்பத்தவர்களாலும் ‘பெய் லிக்கு’கள் என்றழைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆண்டுவந்தார்கள். இப்படியான பகுதிகள் கரமான், ஜெர்மியான், எஸ்ரிஃப், ஹமித், மெண்டிசி, கேண்டர், பெர்வனி, சாஹிப் அடா, கரெசி, ஸருஹான், அய்டின் மற்றும் ஒஸ்மனோகுல்லார் ஆகியவை ஆகும். சரித்திரம் இதை “பெய்லிக் காலம்” என்று குறிப்பிடுகிறது. அனடோலியா செல்ஜுக்குகள் ஆட்சி இழந்ததற்கு மங்கோலியர்களின் வரவும் ஒரு முக்கிய காரணம். இதன் பிறகு, சற்று பலம் வாய்ந்த கரமான் பகுதி பெய்லிக் மன்னர் மெஹ்மூத் பெய் என்பவர் தென் துருக்கியில் பிரபலமானார். அவர் அரசு மொழியாக துருக்கியைத் தவிர வெறெதுவும் ஏற்றுக் கொள்ள மறுத்தார். மற்றொரு பெய்லிக் ஓஸ்மனோகுல்லாரி சரித்திரத்தில் தங்கள் பெயரை மிகவும் அழுத்தம் திருத்தமாக எழுதும் வண்ணத்தில் வெளிக் கிளம்பி னார்கள். ஓஸ்மனோகுல்லாரி என்றால் ஒஸ்மானின் மகன்கள் என்று பொருள். அவர்களில் எர்துக்ருல் என்பவர் அங்காரா மற்றும் கான்ஸ்டாண்டி நோபிளின் இடையில் ஸோகூத் என்னும் இடத்தில் பெருவாரியான நிலப்பரப்பைக் கைப்பற்றி இருந்தார். அவருக்குப் பிறகு, அவர் மகன் ஒஸ்மான் ஆளுகைக்கு வந்தார். ஒஸ்மான் துருக்கி மொழியில் ஒத்மான் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒஸ்மானின் தொடர்ச்சியாக வந்தவர்கள் பெரும் பேரரசை நிறுவினார்கள். சிறு பகுதியை ஆண்ட இவர்கள் கற்பனைக்கு எட்டாத வண்ணம், இதுவரை உலகம் கண்டிராத துருக்கி “ஓட்டோமான்" களாக ஆதிக்கம் செலுத்தினார்கள். 

கருத்துகள் இல்லை: