மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஜானிஸ்ஸரீஸ் படை வரலாறு 2



ஜானிஸ்ஸரீஸ்கள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டார்கள். துருக்கியில் ஜிமாத் என்று அழைக்கப்பட்ட 101 வீர்ர்கள் வீதம் கொண்ட முண்னணிப்படை. பெய்லிக் என்று அழைக்கப்பட்ட 61 வீரர்கள் வீதம் கொண்ட சுல்தானின் பாதுகாப்புப்படை. செக்பான் என்று அழைக்கப்பட்ட 34 வீரர்கள் வீதம் அடங்கிய காலாட்படை என்று இருந்தது. யெர்லிய்யஸ் என்ற படைகள் நிரந்திரமாக ஏதாவது ஒரு ஊரிலோ அல்லது நகரத்திலோ நிற்க வைக்கப்படும். ஆரம்பத்தில் ஜானிஸ்ஸரீஸ் படைகள் ஈட்டி எறிவதில் வல்லவராக இருந்தார்கள். பின் 15 ம் நூற்றாண்டில் பரவலாகக் கிடைத்த வெடிமருந்துகளைப் பயன்படுத்தினார்கள். மிலீ போரில் கோடாரிகளைப் பயன்படுத்தினார்கள். சீருடையுடன் கூடிய ‘யடகன்’  எனப்பட்ட வாள் ஜானிஸ்ஸரீஸ்களின் அடையாளமாகத் திகழ்ந்தது.
                           16 ம் நூற்றாண்டுகளில் ஓட்டோமானின் எதிரிகளை அஞ்சவைத்த 80 மில்லிமீட்டர் தோட்டாக்கள் பொருத்தப்பட்ட ‘ட்ரென்ச் கன்’ பயன்படுத்தப்பட்டது. மேலும் கையெறி குண்டு, கை பீரங்கி ஆகியவற்றையும். 1645 க்குப் பிறகு க்ரீடன் போரில் கைத்துப்பாக்கியும் பயன்படுத்தினார்கள்.
                                    சமூகத்தில் கலந்திருந்ததனாலும், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததனாலும் இவர்கள் எப்போதும் சற்று தயக்கத்துடனே வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு உயர்குடிமக்கள் அந்தஸ்து கொடுக்கப் பட்டிருந்ததால் 17 ம் நூற்றாண்டில் இவர்கள் சமூகத்திலும், இராணுவத்திலும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் எதிர்பார்த்து அரசாங்கத்திற்கு எதிராக மெதுவாக செயல்பட ஆரம்பித்தார்கள். ஜானிஸ்ஸரீஸ் படை வீரர்களின் பிள்ளைகளுக்கு மைதானம் சார்ந்த கடுமையான பயிற்சிகள் தேவையில்லை என்றார்கள். ஒரு கலகத்தை ஏற்படுத்தி அதனால் தங்களுக்கான ஆதாயத்தைப் பெற துணிந்தார்கள். அரண்மனைக் காவலில் இருந்த ஜானிஸ்ஸரீஸ் படைகள் மூலம் சுல்தானையே சிறைபிடிக்க முடியும் என்றும் நம்பினார்கள். சில சர்ச்சைகளால் ஓட்டோமானின் வடக்குப் பகுதியில் பிரச்சினை ஆரம்பித்தது.
                           ஜானிஸ்ஸரீஸ்கள் சம்பள உயர்வு வேண்டும் என்று கேட்டார்கள். ஒவ்வொரு சுல்தான் மாறும் போதும் அவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டது. சுல்தான் இரண்டாம் செலிம் தான் ஜானிஸ்ஸரீஸ் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதித்தார். இப்படி பல சலுகைகளை அனுபவித்த பிறகும், ஐரோப்பாவுக்கு எதிரான ஓட்டோமான்களின் போரில் சரியான ஒத்துழைப்பைத் தராமல் இருந்தார்கள். சுல்தான் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது போன்ற வதந்தியைக் கேள்விப்பட்டு சுல்தான் மூன்றாம் செலிமைக் கைது செய்து பெயர் பெற்ற ஏழு கோபுரங்கள் என்ற இடத்தில் வைத்துக் கொன்றார்கள்.
                           வடக்குப் பகுதியில் ஸ்மெடெரெவோ என்ற பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜானிஸ்ஸரீஸ்கள், எங்கே சுல்தான் செர்பியர்களின் கூட்டுடன் சேர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து விடுவாரோ என்று அஞ்சி மத்திய செர்பியாவிலிருந்த அனைத்து தலைவர்களையும் கொன்றார்கள். இது ஸ்லாட்டர் ஆஃப் தி நிஸெஸ் (SLAUGHTER OF THE KNEZES) என்று எல்லோராலும் அறியப்பட்டது. இரண்டாம் மெஹ்முத் ஒரு ஆண்டுகாலம் தன்னைச் சுற்றி முதலில் பலப்படுத்திக் கொண்டார். முதலில் ஓட்டோமான் இராணுவத்தை தற்போதைய ஐரோப்பிய முறையில் நவீனப்படுத்தப் போவதாக அறிவித்தார். ஆத்திரமடைந்த ஜானிஸ்ஸரீஸ்கள் அனைவரும் தங்குமிடங்களை விட்டு கலவரம் செய்த வண்ணம் சுல்தானின் கோட்டையை நோக்கி வந்தனர். முதலில் அவர்களின் தங்குமிடங்களை சுல்தான் அழித்தார். அட்டூழியம் செய்த 4000 ஜானிஸ்ஸரீஸ் படையினரைக் கொன்றார். மேலும், அனைத்துக்கும் காரணமான 1000 வீரர்களை விசாரணைக்குப் பிறகு கொன்றார். இந்த சம்பவம் சரித்திரத்தில் ‘தி ஆஸ்பிஷியஸ் இன்ஸிடண்ட்’ என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.                                    

ஜானிஸ்ஸரீஸ் படை வரலாறு 1



ஜானிஸ்ஸரீஸ் என்பது ஓட்டோமான் பேரரசின் சிறப்பு போர் படையாகும். ஜானிஸ்ஸரீஸ் என்றால் துருக்கியில் புதிய வீரர்கள் என்று அர்த்தம். இந்த ஜானிஸ்ஸரீஸ் படைக்கு ஆறு வயதிலிருந்தே தேர்வு செய்து பயிற்சி அளிப்பார்கள். இந்தப் பயிற்சி உடல்தகுதி, உயர்கல்வியுடன் எதிர்காலத்தில் பொறியியலாளராகவோ, கட்டிடக்கலை நிபுணராகவோ, மருத்துவராகவோ, ஆராய்ச்சியாளராகவோ அல்லது அதிகபட்சம் வைசிராயராகவும் உயரும் தகுதியுடன் கூடியது. இவர்கள் சுல்தானின் தனிப்பாதுகாவலராகவும் இருப்பார்கள். பால்கன் தீபகற்பம், வட கிரீஸ், செர்பியா, அனடோலியாவில் இருந்த கிறிஸ்தவர்களும் இந்தப்படையில் இருந்தார்கள். போரில் காலாட்படைகளாக இது 1363 லிருந்து 1826 வரை ஓட்டோமான் பேரரசில் இருந்தது. ஆரம்பத்தில் 1000 வீரர்களாக இருந்த ஜானிஸ்ஸரீஸ் படைவீரர்களின் எண்ணிக்கை 1680 ல் 135,000 வரை உயர்ந்தது. இதன் தலைமையகங்கள் அட்ரியனோபிள்(எடிர்னி) மற்றும் கான்ஸ்டாண்டி நோபிளில்(இஸ்தான்புல்) இருந்தது. இந்த படைவீரர்கள் பெயர் பெற்ற கொஸோவா போர், நிகோபாலிஸ் போர், அங்காரா போர், வர்னா போர், சால்டிரன் போர், மொஹாக்ஸ் போர், வியன்னா போர் இன்னும் பல போர்களில் ஓட்டோமான் பேரரசுக்காக போரிட்டிருக்கிறார்கள்.            
                                ஜானிஸ்ஸரீஸுக்கு முதல் கமாண்டராக சுல்தான் முதலாம் முராதும், கடைசி கமாண்டராக சுல்தான் இரண்டாம் மஹ்மூதும் இருந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மிகவும் கட்டுப்பாடாக இருந்த ஜானிஸ்ஸரீஸ் ஊழல்களும், தவறுகளும் நிறைந்து, விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட 6000 பேர் தூக்கிலிடப்பட்டு சுல்தான் இரண்டாம் மஹ்மூதால் கலைக்கப்பட்டது. பெரும்பான்மையான வீரர்கள் நாடோடிகளிடமிருந்து வந்ததால் முரட்டுத்தனத்துடன் இருந்த இவர்களிடம் மற்றவற்றை எதிர்பார்ப்பது மிகவும் கடினம். இராணுவக் கட்டுப்பாடு, சிறந்த கல்வி, நேர்மையுடன் இருந்த ஜானிஸ்ஸரீஸ்கள் சுல்தான்களின் அவ்வப்போதைய சலுகைகளால் பொதுமக்களோடு சாதாரணமாக வாழலாம், நகரில் நிலங்கள் வாங்கிக்கொள்ளலாம், வியாபாரங்கள் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் நாட்டு மக்களுடன் கலந்தனர். போட்டி, பொறாமைகள் எழுந்தன, அவர்களின் அடிப்படை இராணுவ ஒழுக்கம், கட்டுப்பாடுகள் சீர்குலைந்தன. பயிற்சிகளுக்கு முறையாக செல்வதைத் தவிர்த்தனர். தங்களின் சொந்த ஆதாயத்துக்கே முதலிடம் கொடுத்தார்கள். முதலில் ஒழுக்கத்துடன் இவர்கள் தான் உலகில் முதல்முதலில் சீருடையணிந்த இராணுவத்தினர். ஜானிஸ்ஸரீஸ்களுக்கு சம்பளம், ஓய்வூதியம், பணி ஓய்வு மற்றும் தனிசமூக அந்தஸ்து ஆகியவை உண்டு. சிறப்பான தகுதியில் இருந்தார்கள். தேர்ந்தெடுத்த சிலரை ‘எண்டெருன்’ என்னும் அரண்மனைப் பள்ளியில் தங்கவைத்து சிறப்புப்பயிற்சி கொடுப்பார்கள். இதனால் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமிய மன்னர் பரம்பரையில் உயர்பணிகளை புரியும் வாய்ப்பு கிடைத்தது. எண்டெருனில் படிப்பது பெரிய கௌரவமாக இருந்தது ஏனென்றால் பல கலாச்சாரத்தைச் சேர்ந்த மாணாக்கர்கள் இருந்தார்கள், தரமான கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. உலகிலேயே மிகச்சிறந்த கல்வி அங்கு வழங்கப்பட்டது. முதலாம் முராதுக்குப் பின் வந்த இரண்டாம் முராத் எண்டெரூனை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தினார்.
                       பால்கன் பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் 6 லிருந்து 14 வயதான பிள்ளைகளைத் தானே முன் வந்து எண்டெரூன் பள்ளியில் சேர்ப்பதில் ஆர்வமாக இருந்தார்கள். ஜானிஸ்ஸரீஸ்கள் ஓட்டோமான் பேரரசில் ‘அஸ்கெரி’ என்னும் உயர்தரகுடிமக்களாகக் கருதப்பட்டனர். 16 ம் நூற்றாண்டின் சுல்தான் ஜானிஸ்ஸரீஸ் வீரர்களின் பிள்ளைகளும் ஜானிஸ்ஸரீஸ் படையில் சேரலாம் என்றும், தாடி வைத்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டு, 300 ஆண்டுகளாக அதற்கெல்லாம் இருந்த தடையை நீக்கினார். ஜானிஸ்ஸரீஸ் வீரர்களாய் இருந்து புகழ் பெற்றவர்கள் அல்பேனியாவைச் சேர்ந்த ஜார்ஜ் கஸ்ட்ரியோடி 20 ஆண்டுகளாக நடந்த அல்பேனிய கலவரத்தை அடக்கினார். போஸ்னியாவைச் சேர்ந்த சொகொல்லு மெஹ்மெத் பாஷா என்பவர் 14 ஆண்டுகாலம் ஓட்டோமானின் தலைமை வைசிராயராக இருந்து மூன்று சுல்தான்களிடம் பணிபுரிந்தார்.
                                போர் இல்லாத காலங்களில் ஜானிஸ்ஸரீஸ்கள் தீயணைப்பு பணிகள், காவலர் மற்றும் அரண்மனைக்காவல் ஆகியவற்றை கவனிப்பார்கள். அவர்களுக்குத் தேவையான சாலைகளைப் போடுவது, கூடாரங்களைப் போடுவது, ரொட்டி தயாரிப்பது என்று சகல பணிகளையும் செய்து கொள்வார்கள். ஜானிஸ்ஸரீஸ் படையிலிருந்து பணி ஓய்வு பெற்றிருந்து ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருந்தாலும் அவர்களின் பிள்ளைகளை பேரரசு கவனித்துக் கொண்டது. ஓட்டோமான் பேரரசின் எல்லைகள் விரிவான பின் பல்கேரியா, க்ரோட்ஸ், செர்ப்ஸ், ரோம், ஜியாரியா, போல்ஸ், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருப்பவர்களையும் ஜானிஸ்ஸரீஸ் படையில் சேர்த்தார்கள். ஊழல்களும், சீர்கேடும் ஜானிஸ்ஸரீஸ் படையில் தலைவிரித்து ஆடியதால் சுல்தான் நான்காம் மெஹ்மெத் துருக்கிய முஸ்லீம்களை மட்டும் படையில் சேர்த்தார். சுல்தான் முதலாம் அஹ்மெத் காலத்தில் ஒருநாளைக்கு 3 அக்சிஸாக இருந்த ஜானிஸ்ஸரீஸ்களின் சம்பளம். பதவி உயர்வு பெற்றால் 10 அக்சிஸாக உயர்த்தப்பட்டது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை 12 அக்சிஸ்கள் சீருடை சீரமைக்கவும், 30 அக்சிஸ்கள் ஆயுதங்கள் கையாள்வதற்கும் மேலும் ஒரு தொகை வெடிமருந்து கையாள்வதற்கும் வழங்கப்பட்டது. படைக்கு தேர்ந்தெடுத்தவர்களை முதலில் துருக்கிய குடும்பங்களுக்கு அனுப்பி எப்படி துருக்கி மொழி பேசுவது இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களை ஆரம்ப பாடமாக பயில வைத்தனர்.

கர்மாஷியன்கள் வரலாறு




                         கர்மாஷியன்கள் என்பவர்கள் (அரபியில் கராமிதா) ஷியா பிரிவின் இஸ்மாயிலிகளுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டவர்கள். இவர்கள் வெறும் சைவம் மட்டுமே சாப்பிடுவதால் ‘தி கிரீன்க்ரோஸர்’ (அரபியில் அல் பக்லியாஹ்) என்றும் அறியப்பட்டனர். இவர்கள் 899 ல் ரிலிஜியஸ் உடோபியன் ரிபப்ளிக் என்று ஒரு அமைப்பை தொடங்கி கிழக்கு அரேபியாவில் அல் ஹஸா என்ற பகுதியை தலைமையகமாக ஆக்கிக்கொண்டார்கள். இந்த கர்மாஷியன்கள் அப்பாஸியர்களின் ஆட்சியில் புரட்சி செய்து புகழ் பெற்றார்கள். மக்காவிற்கு புனித யாத்ரீகர்கள் வந்திருந்த சமயத்தில் அதன் தலைவன் அபு தாஹிர் அல் ஜன்னபி என்பவன் கருப்புக்கல்லை கொள்ளையடித்துக் கொண்டு, ஜம்ஜம் என்றும் நீரின் புனிதத்தையும் பாழ்படுத்தி இஸ்லாமிய உலகத்தை அதிர்ச்சிப் படுத்தினான்.
                           750 லிருந்து 1258 வரை ஆண்ட அப்பாஸிய       ( நபி (ஸல்)அவர்களின் வம்சத்து சுன்னிப்பிரிவு) ஆட்சியாளர்களை எதிர்த்து பல ஷியா பிரிவு குழுக்கள் தோன்றின. அதில் இஸ்மாயிலிக்கள் சமூகத்தைச் சேர்ந்த முதன்மைக் குழு ‘முபாரகிய்யாஹ்’ ஆகும். அதன் தலைமை இமாம் ஜாஃபர் அல் சாதிக் என்பவர் தன் இரண்டாவது மகன் இஸ்மாயில் இப்ன் ஜாஃபரை கொன்றுவிட உத்திரவிடுகிறார். சிலர் அவர் தப்பி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று சொல்ல, இஸ்மாயிலிகள் அவர் இறந்து விட்டதாகக் கூறி அவரின் மூத்த மகன் முஹம்மது இப்ன் இஸ்மாயிலை இமாமாக ஏற்றுக்கொண்டார்கள். அவர் கூஃபாவில் தங்கியிருந்த பெரும்பான்மையான முபாரகிய்யாஹ் குழுவினருடன் தொடர்பில் இருந்தார். முஹம்மது இப்ன் இஸ்மாயில் இறந்து போக, இதை ஏற்றுக்கொள்ளாத அதிகப்படியானோர் அவர் இறக்கவில்லை அவர் ஒரு மஹ்தி என்றார்கள். இதனால் முபாரகிய்யாஹ்வில் பிளவு ஏற்படுகிறது. இறந்துவிட்டார் என்று நம்பிய குறைவானோர் ஃபாத்திமிட் இஸ்மாயிலிகள் என்று ஆனார்கள்.
                           இந்த அதிகப்படியானோர்கள் அல் ஹுஸைய்ன் அல் அஹ்வாஸி என்பவர் தலைமையில் ஸலாமியாஹ்(தற்போதைய சிரியா) மற்றும் குஸெஸ்தான்(தென்மேற்கு பெர்ஷியா) என்ற இடங்களில் தஞ்சமடைந்திருந்தார்கள். அதன் தலைவர் குஸெஸ்தானின் கூஃபன் மன் ஹம்தானை தங்கள் பிரிவுக்கு மாற்ற, அவர் ‘கர்மத்’ என்று பெயர் பெற்றார். கர்மத்தும் அவரின் மதவாதி மருமகன் அப்தன் என்பவரும் புதிய மஹ்தி வரப்போகிறார் என்று தென் ஈராக்கில் மத மற்றும் இராணுவ அமைப்புகளை தயார் படுத்தினார்கள். இது மேலும் ஏமன், பஹ்ரைன் மற்றும் வட ஆப்பிரிக்காவிலும் பரவியது. இவர்களின் போதிப்பு கவர்ச்சியாக இருந்ததைக் கண்ட புதியதாக ஷியா பிரிவில் சேர்ந்தவர்கள் இதில் இணைந்து கொண்டார்கள். பின்னாளில் கர்மாஷியன்கள் ஈரான் மற்றும் ட்ரான்ஸோக்சியானா வரை பரவியது. ஸலாமிய்யாவில் இருந்தவர்களுக்கும், கர்மத் அவர்களுக்கும் இடையே மஹ்தியின் இறப்பு சம்பந்தமாக கருத்து வேறுபாடு வந்து கலவரம் நடந்து மருமகன் அப்தன் கொல்லப்பட்டார். கர்மத் புதிய இமாமாகி அப்துல்லஹ் அல் மஹ்தி பில்லாஹ் என்று 909 ல் வட ஆப்பிரிக்காவில் ஃபாத்திமிட்கள்(நபி(ஸல்)அவர்களின் மகளார்) ஆட்சியை கொண்டு வந்தார். அபூ ஸா இத் ஜன்னபி என்பவர் அப்பாஸியர்களிடமிருந்து பஹ்ரைன் மற்றும் அல் ஹஸா ஆகியவற்றைக் கைப்பற்றினார்.
                             அரேபிய பாலையைக் கடந்து மக்கா புனித யாத்திரை செல்பவர்களத் தாக்கி கொன்றார்கள். 906 ல் அதுபோல் 20,000 யாத்ரீகர்களின் வாகனத்தை வழி மறித்து கொன்றார்கள். 10 ம் நூற்றாண்டுகளில் பெரும் சக்தியாக வளர்ந்து ஓமனின் கடற்கரைப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள். மத்திய கிழக்கிலும், பெர்ஷியாவிலும் வளர்ந்திருந்தார்கள். கர்மாஷியன்களுக்கு எதிராக இருந்த இஸ்மாயிலிகள் இடமிருந்தும் கெய்ரோவிலிருந்து கப்பம் பெற்றார்கள்.
                        கர்மாஷியன்கள் கைப்பற்றி இருந்த இடங்கள் நல்ல வளமான இடங்கள். அடிமைச்சந்தை வாணிபத்தால் வரவு இருந்தது. பழங்களும், பருப்பு வகைகளும் விளையும் தீவுகள் நிறைந்திருந்தன. 1051 ல் அல் ஹஸா விஜயம் செய்திருந்த நஸிரி குஸ்ரு என்பவர்,’அங்கு ஒரு பண்னையில் 30,000 எத்தியோப்பிய அடிமைகள் பணியில் இருந்தார்கள். ஹஸாவாசிகளுக்கு வரிவிதிப்பில் விலக்கிருந்தது. ஏழையாய் இருந்தவர்களுக்கும், வியாபாரச்சரிவு கண்டவர்களுக்கும் கடன் வழங்கப்பட்டது.’ என்று கூறினார். ஒரு கர்மாஷியன் ஆட்சியாளர் 920 வெளியிட்டிருந்த நாணயம் 20 ம் நூற்றாண்டு வரை ஹஸாவில் புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 931 ல் வந்த சனி கிரகத்தை கருத்தில் கொண்டு கர்மாஷியன்களின் தலைவர் அபூ தாஹிர் அல் ஜன்னபி உலகம் அழியப் போகிறது என்றார். ஸோரோஸ்ட்ரியன் மதத்தூதர் மறைந்து 1500 ஆண்டுகள் வேறு ஆகியிருந்தது. புது மெஹ்தி வரப்போகிறார் என்ற பரபரப்பு இருந்தது. அதை எதிர்நோக்கி அபூ தாஹிர் அல் ஜன்னபி தனக்கு நம்பிக்கையான ஒரு இளைஞரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார்.
                                     திடீரென்று அந்த பெர்ஷிய இளைஞர் இஸ்லாமிய சட்டம், தொழுகை ஆகியவற்றைப் புறக்கணிக்கச் சொன்னார், இறைத்தூதர்கள், இமாம்களை கேவலப்படுத்தினார். பல கர்மாஷியன் தலைவர்களைக் கொன்றார். இது முதல் தூதர் ஆதம்(அலை)அவர்களின் பூமி என்றார். 80 நாட்களே ஆண்ட அந்த இளைஞரை அபூ தாஹிர் கொன்று விட உத்தரவிட்டார். ஆனால், அந்த இளைஞர் ஏற்படுத்திய பாதிப்பு கர்மாஷியன்களின் அமைப்புக்கு சரிவைத் தந்தது. மேலும் 976 ல் சில பகுதிகளில் அப்பாஸியர்கள் கர்மாஷியன்களைத் தோற்கடித்தார்கள். ஈராக் போன்ற பகுதிகளிலிருந்து வந்த கப்பங்கள் நின்று போயின. உள்நாட்டுப் பொருளாதாரம் வீழ்ந்தது. பஹ்ரைனிலும் அபு அல் பஹ்லுல் அல் அவ்வாம் என்ற தலைவர் ஷியாபிரிவிலிருந்து விலகி சுன்னிப்பிரிவை ஏற்றுக் கொண்டார். இப்படி பல வகைகளிலும் சரிந்த கர்மாஷியன்கள் ஹோஃபுஃப் பகுதியில் சுருங்கி போனார்கள். அப்துல்லாஹ் பின் அலி அல் உயூனி என்பவர் செல்ஜுக் படைகளின் உதவியுடன் தொடர்ந்து 7 ஆண்டுகள் ஹோஃபுஃப் பகுதி மீது படையெடுத்து கர்மாஷியன்களின் இறுதி ஆட்சியை சரணடைய வைத்தார்.

சனி, 23 ஆகஸ்ட், 2014

பஹாமனி ஆட்சி 2



1436 லிருந்து 1458 வரை இரண்டாம் அஹ்மது ஷாவின் ஆட்சி நடைபெற்றது. இவர் ஒரு சிறந்த மன்னராக விளங்கியதோடல்லாமல் மகானாக புகழ் பெற்றார். வெளியிலிருந்து வந்தவர்களுக்கே தனது மந்திரிசபையில் இடமளித்தார். சங்க்மேஷ்வர் ராஜாவின் மகளை மணந்து அவருக்கு “ஸெபா செஹ்ரா” என்னும் பட்டம் சூட்டினார். இரண்டாம் அஹ்மது ஷாவின் பெயரில் வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தின் காலம் கண்டுபிடிக்க பட்டபின் முதலாம் அஹ்மது ஷா உயிருடன் இருக்கும் போதே இரண்டாம் அஹ்மது ஷா ஆட்சியில் இருந்ததாக அறியப் படுகிறது. இரண்டாம் அஹ்மது ஷா தனது காலில் பலமாக ஏற்பட்ட காயத்தின் காரணமாக இறந்தார். 1458 லிருந்து 1461 வரை அலாதீன் ஹுமாயுன் ஸாலிம் ஷா ஆட்சியிலிருந்தார். இவர் முந்தைய ஆட்சியாளரின் மூத்த மகனாவார். எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவும், கடுமையானவராகவும் இருந்தார். தனது நெருங்கிய உறவினர் சிக்கந்தர் கானுக்கு அதிகாரம் வழங்க, அவர் புரட்சியில் ஈடுபட்டார். அவரை அலாதீன் ஹுமாயுன் ஸாலிம் ஷா நசுக்கிக் கொண்டார். 1461 ல் ஹுமாயுன் இறந்தார். இவருக்குப் பிறகு, இவர் மகன் மூன்றாம் அஹ்மது என்னும் நிஜாம் ஷா 1461 லிருந்து 1453 வரை பதவியில் இருந்தார். இவர் தனது எட்டாவது வயதில் ஆட்சிக்கு வந்தார். ஷா முஹிப்புல் லா மற்றும் சையதுஸ் ஸதாத் சையத் ஹனிஃப் ஆகியோரின் மேற்பார்வையில் ஆட்சி புரிந்தார். தோவகிர் ராணி மக்துமா இ ஜஹான் நர்கிஸ் பேகம் இவரின் ஆட்சிக்கு மையமாக இருந்து ஆண்டதாக சொல்லப்படுகிறது. மூன்றாம் அஹ்மதுவின் ஆட்சியில் அனைத்து அரசு கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். மூன்றாம் அஹ்மது திருமணநாள் அன்று மரணமடைந்தார். இவருக்குப் பிறகு, இளைய சகோதரர் ஷம்சுத்தின் மூன்றாவது முஹம்மது ஷா ஆட்சிக்கு வந்தார். 1463 லிருந்து 1482 வரை ஆண்டார். மூன்றாவது முஹம்மது ஷா 14 வயதில் திருமணம் செய்து கொண்டார். தோவகிர் ராணியும் அதிகாரவர்கத்திலிருந்து விலகிக் கொண்டார். மலிக் உத் துஜ்ஜார் மஹ்முத் கவான் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டார். இவர் பஹாமனி ஆட்சியை சரித்திரத்தில் இடம் பெற பல நன்மைகள் செய்தார். இவர் காலத்தில் பரேண்டா கோட்டை, பிதாரின் புகழ்பெற்ற கல்லூரி மற்றும் பிதாரின் மதரஸா ஆகியவை குறிபிடத்தக்கவை. கோவா மற்றும் ஒரிஸ்ஸாவின் கபிலேஸ்வர் வெற்றி கொள்ளப்பட்டது. தோவகிர் ராணி 1470 ல் இறந்தார். பஹாமனிகளின் எல்லை வங்காள விரிகுடா வரை கிழக்கிலும், அரபிக்கடல் வரை மேற்கிலும் பரவியது. மஹ்முத் கவான் தான் முதல்முதலாக எல்லைகளையும், நிலங்களையும் அளந்து அதற்கேற்றார்போல் நகரங்களிலும், கிராமங்களிலும் வரி வசூலிக்கச் செய்தார். பஹாமனிகளின் தெற்கு எல்லையாக காஞ்சிபுரம் வரை பரவியது. ஒரிஸ்ஸாவின் புருஷோத்தமுக்கும், தனக்கும் டெக்கானை பிரிப்பது தொடர்பாக போலி பத்திரம் உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, மஹ்முத் கவான் 73 வது வயதில் மன்னரால் மரணதண்டனை கொடுக்கப்பட்டார். பின்னாளில் மஹ்முத் கவான் நேர்மையானவர் என்பதை அறிந்து, அவர் மகனுக்கு மூன்றாவது முஹம்மது ஷா பதவிகள் வழங்கினார்.
                                             மூன்றாவது முஹம்மது ஷாவிற்குப் பிறகு, மகன் நான்காவது முஹம்மது ஷா 1482 லிருந்து 1518 வரை ஆட்சியிலிருந்தார். இவர் 12 வயதில் ஆட்சிக்கு வந்தார். புதிய நடைமுறையாக ராணி அதிபராக இருந்தார். இவர் எந்தநேரமும் மது, மாது மற்றும் ஆடல் பாடல்கள் கேளிக்கைகளிலேயே மூழ்கியிருந்தார். இவரின் ஆட்சியின் போது தான் அஹமது நகர் உருவாகியது. இவருக்குப் பிறகு, மகன் 1518 லிருந்து 1520 வரை ஆண்டார். சுல்தானேட் ஐந்து பகுதிகளாக அஹமதுநகர், பிரார், பிதார், பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா என பிரிந்தது. அனைத்தும் சேர்ந்து டெக்கான் சுல்தானேட் என்று அழைக்கப்பட்டது. இவருக்குப் பிறகு, மகன் அலாத்தின் ஷா 1520 லிருந்து 1523 வரை ஆட்சியிலிருந்தார். இவர் மிகவும் நல்லவராக இருந்தார். பதவிக்கு ஆசைப்பட்ட அமீர் பரீத் என்பவர் மன்னர் மீது பழி சுமத்தி கொன்றார். இவருக்குப் பின் மஹ்முத் ஷாவின் மகன் வலி அல்லாஹ் ஷா 1523 லிருந்து 1526 வரை ஆட்சி செய்தார். அமீர் பரீதே இவரை பதவியில் அமர்த்தினார். இவரை அரண்மனையின் பெண்களுடன் உணவு மற்றும் உடைகள் கொடுத்து கைதியாகவே வைத்திருந்தார். அமீர் பரீத் அஹமது ஷாவின் 23 வயதான விதவை மனைவி பீபி சித்தி என்பவரை மணந்து கொண்டார். நாளடைவில் ராணியுடனும் கள்ளத்தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். இதை மன்னர் எதிர்க்க விஷம் வைத்து கொல்லப்பட்டார். 1526 முதல் 1527 வரை கலிமுல்லாஹ் ஷா ஆட்சி செய்தார். கலிமுல்லாவின் மகன் மஹ்மூத் ஷா தான் கடைசி பஹாமனிகளின் மன்னர். இவரை அமீர் பரீத் தன் கைப்பாவையாக வைத்திருந்தார். அந்த நேரத்தில் தான் புதிய புயலாக ஜஹீருத்தீன் முஹம்மது பாபர் இந்தியாவுக்குள் நுழைந்தார். அனைத்து டெக்கான் ஆட்சியாளர்களும் புதிய மொகலாய மன்னருக்கு அடிபணிந்தனர். கலீமுல்லாஹ் ஷா பாபருக்கு கடிதம் எழுதி தன்னை அமீர் பரீதிடமிருந்து விடுவிக்க வேண்டினார். இந்த தகவல் வெளியாகி விட கலிமுல்லாஹ் உயிருக்கு பயந்து 1527 ல் பிஜப்பூர் சென்றார். அங்கு சரியான வரவேற்பில்லாததால் அஹ்மத்நகர் சென்றார். அங்கு சுல்தானேட் ஆட்களால் பிடித்துக் கொல்லப்பட்டார். அவரின் உடல் பிதாருக்கு கொண்டு வரப்பட்டது. இவருக்குப் பிறகு, இவர் மகன் இல்ஹமுல்லாஹ் மக்காவுக்கு சென்றார். அவர் திரும்பவே இல்லை. இப்படியாக 200 ஆண்டுகளாக ஆண்ட பஹாமனி ஆட்சி முடிவுக்கு வந்தது. இவர்களின் ஆட்சியில் தர்கா வழிபாடு மேலோங்கி இருந்தது. இறைவன் தந்த அருட்கொடையாம் அரசாட்சியை போட்டி, பொறாமை, மது, மாது, கொலைகள் என்று தவறாக பயன்படுத்தி இழந்தவர்கள்.