ஜானிஸ்ஸரீஸ்கள்
மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டார்கள். துருக்கியில் ஜிமாத் என்று அழைக்கப்பட்ட 101
வீர்ர்கள் வீதம் கொண்ட முண்னணிப்படை. பெய்லிக் என்று அழைக்கப்பட்ட 61 வீரர்கள்
வீதம் கொண்ட சுல்தானின் பாதுகாப்புப்படை. செக்பான் என்று அழைக்கப்பட்ட 34 வீரர்கள்
வீதம் அடங்கிய காலாட்படை என்று இருந்தது. யெர்லிய்யஸ் என்ற படைகள் நிரந்திரமாக
ஏதாவது ஒரு ஊரிலோ அல்லது நகரத்திலோ நிற்க வைக்கப்படும். ஆரம்பத்தில் ஜானிஸ்ஸரீஸ்
படைகள் ஈட்டி எறிவதில் வல்லவராக இருந்தார்கள். பின் 15 ம் நூற்றாண்டில் பரவலாகக்
கிடைத்த வெடிமருந்துகளைப் பயன்படுத்தினார்கள். மிலீ போரில் கோடாரிகளைப்
பயன்படுத்தினார்கள். சீருடையுடன் கூடிய ‘யடகன்’
எனப்பட்ட வாள் ஜானிஸ்ஸரீஸ்களின் அடையாளமாகத் திகழ்ந்தது.
16 ம்
நூற்றாண்டுகளில் ஓட்டோமானின் எதிரிகளை அஞ்சவைத்த 80 மில்லிமீட்டர் தோட்டாக்கள்
பொருத்தப்பட்ட ‘ட்ரென்ச் கன்’ பயன்படுத்தப்பட்டது. மேலும் கையெறி குண்டு, கை
பீரங்கி ஆகியவற்றையும். 1645 க்குப் பிறகு க்ரீடன் போரில் கைத்துப்பாக்கியும்
பயன்படுத்தினார்கள்.
சமூகத்தில் கலந்திருந்ததனாலும், வெளிநாடுகளைச்
சேர்ந்தவர்களாக இருந்ததனாலும் இவர்கள் எப்போதும் சற்று தயக்கத்துடனே வாழ்ந்து
வந்தார்கள். இவர்களுக்கு உயர்குடிமக்கள் அந்தஸ்து கொடுக்கப் பட்டிருந்ததால் 17 ம்
நூற்றாண்டில் இவர்கள் சமூகத்திலும், இராணுவத்திலும் கௌரவத்தையும் அதிகாரத்தையும்
எதிர்பார்த்து அரசாங்கத்திற்கு எதிராக மெதுவாக செயல்பட ஆரம்பித்தார்கள். ஜானிஸ்ஸரீஸ்
படை வீரர்களின்
பிள்ளைகளுக்கு மைதானம் சார்ந்த கடுமையான பயிற்சிகள் தேவையில்லை என்றார்கள். ஒரு கலகத்தை ஏற்படுத்தி அதனால் தங்களுக்கான ஆதாயத்தைப் பெற
துணிந்தார்கள். அரண்மனைக் காவலில் இருந்த ஜானிஸ்ஸரீஸ் படைகள் மூலம் சுல்தானையே
சிறைபிடிக்க முடியும் என்றும் நம்பினார்கள். சில சர்ச்சைகளால் ஓட்டோமானின் வடக்குப்
பகுதியில் பிரச்சினை ஆரம்பித்தது.
ஜானிஸ்ஸரீஸ்கள் சம்பள உயர்வு
வேண்டும் என்று கேட்டார்கள். ஒவ்வொரு சுல்தான் மாறும் போதும் அவர்களுக்கு சம்பள
உயர்வு வழங்கப்பட்டது. சுல்தான் இரண்டாம் செலிம் தான் ஜானிஸ்ஸரீஸ் திருமணம் செய்து
கொள்ளலாம் என்று அனுமதித்தார். இப்படி பல சலுகைகளை அனுபவித்த பிறகும்,
ஐரோப்பாவுக்கு எதிரான ஓட்டோமான்களின் போரில் சரியான ஒத்துழைப்பைத் தராமல்
இருந்தார்கள். சுல்தான் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பது போன்ற
வதந்தியைக் கேள்விப்பட்டு சுல்தான் மூன்றாம் செலிமைக் கைது செய்து பெயர் பெற்ற ஏழு
கோபுரங்கள் என்ற இடத்தில் வைத்துக் கொன்றார்கள்.
வடக்குப்
பகுதியில் ஸ்மெடெரெவோ என்ற பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜானிஸ்ஸரீஸ்கள், எங்கே
சுல்தான் செர்பியர்களின் கூட்டுடன் சேர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து விடுவாரோ
என்று அஞ்சி மத்திய செர்பியாவிலிருந்த அனைத்து தலைவர்களையும் கொன்றார்கள். இது
ஸ்லாட்டர் ஆஃப் தி நிஸெஸ் (SLAUGHTER OF THE KNEZES) என்று எல்லோராலும் அறியப்பட்டது. இரண்டாம்
மெஹ்முத் ஒரு ஆண்டுகாலம் தன்னைச் சுற்றி முதலில் பலப்படுத்திக் கொண்டார். முதலில்
ஓட்டோமான் இராணுவத்தை தற்போதைய ஐரோப்பிய முறையில் நவீனப்படுத்தப் போவதாக
அறிவித்தார். ஆத்திரமடைந்த ஜானிஸ்ஸரீஸ்கள் அனைவரும் தங்குமிடங்களை விட்டு கலவரம்
செய்த வண்ணம் சுல்தானின் கோட்டையை நோக்கி வந்தனர். முதலில் அவர்களின்
தங்குமிடங்களை சுல்தான் அழித்தார். அட்டூழியம் செய்த 4000 ஜானிஸ்ஸரீஸ் படையினரைக்
கொன்றார். மேலும், அனைத்துக்கும் காரணமான 1000 வீரர்களை விசாரணைக்குப் பிறகு
கொன்றார். இந்த சம்பவம் சரித்திரத்தில் ‘தி ஆஸ்பிஷியஸ் இன்ஸிடண்ட்’ என்று பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.