661 (C.E.) உமையாத் கலீஃபாக்கள் ஆண்டனர். பெர்ஷிய
நிர்வாகத்தையே மேற்கொண்டனர். அரபு மொழி ஆட்சி மொழியானது.
750 (C.E.) உமய்யாத்களின் ஆட்சி பிடிக்காத பெர்ஷியர்கள்
பொருளையும், ஆதரவையும் தந்து அப்பாஸிட்கள் ஆட்சியை வரவேற்றனர். அப்பாஸிட்கள் டமாஸ்கசில்
இருந்த இஸ்லாமிய தலைநகரை சஸ்ஸானிய தலைநகரம் செஸிபோனுக்கு அருகிலுள்ள பாக்தாதுக்கு
மாற்றினார்கள். இது பெர்ஷியர்களை இஸ்லாமியர்கள் அடையாளத்துக்கு மாற்றியது.
820 (C.E.) 80 ஆண்டுகாலமாக
ஈரானின் சில பகுதிகளை அரபுகள் ஆண்டார்கள். சிறிது சிறிதாக பெர்ஷியர்களின் கை
மீண்டும் ஓங்க அரபுகள் பெர்ஷியாவை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளானார்கள்.
பெர்ஷியாவுக்குள்ளேயே சிறியதாக பல ஆட்சிகள் தஹிரிட்ஸ் (821-873), ஸஃப்ஃபாரிட்ஸ்
(867-903) சமானிட்ஸ் (873-999) ஸியாரிட்ஸ் (928-1077) மற்றும் புயிட்ஸ் (945-1055)
என்று ஆண்டார்கள். பெர்ஷிய மொழி மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டது. சமானிட்கள்
தான் அதை முதலில் செய்தார்கள். மீண்டும் பெர்ஷியா கலை, கலாச்சாரம், இலக்கியத்தில்
உலகதரத்திற்கு உயர்ந்தது.
850 (C.E.) உலகின் முதல் கணிதவியலாளரும்,
வானாராய்ச்சியாளரும், அல்ஜீப்ரா என்னும் கணித நுணுக்கத்தை கண்டுபிடித்தவருமான
க்வராஸ்மி பெர்ஷியாவைச் சேர்ந்தவர். அல்ஜீப்ரா அவரின் சொந்த பெயரான அல்கோரித்ம் என்பதிலிருந்து
வந்தது. கணிதத்தில் பூஜ்ஜியத்தை இணைத்து ஒருபடை ஆரம்ப கணக்கை இருபடையாக
முடித்தார்.
865 (C.E.) ராஸி என்ற உலகப்புகழ் வாய்ந்த பௌதிகவாளரும்,
தத்துவ மற்றும் இரசாயன ஆராய்ச்சியாளர் தோன்றினார். மருத்துவத்திற்கு தேவையான
ஆல்கஹாலைக் கண்டுபிடித்தார். மருந்துகளைப் பற்றி பல புத்தகங்களை எழுதினார்.
சின்னம்மை, தட்டம்மை பற்றி இவர் எழுதிய ஆராய்ச்சி புத்தகம் ஐரோப்பாவில் பல
மொழிகளில் வெளியிடப்பட்டது.
980 (C.E.) உலகப்புகழ் வாய்ந்த அவிசின்னா சினா என்னும்
மருத்துவ தத்துவ ஆராய்ச்சியாளர் இருந்தார். இவரின் “கேனன் ஆஃப் மெடிசின்” உள்பட
200 அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார்.
1220 (C.E.) மங்கோலிய மன்னன் ஜெங்கிஸ்கான் என்பவன்
சரித்திரத்தில் அதுவரை இல்லாத கொடூரத்துடன் பெர்ஷியாவைத் தாக்கினான். வடகிழக்கு
ஈரானில் ஹுலகு கான் என்பவன் பல நகரங்களை நிர்மூலமாக்கி, நூலகங்களையும்,
மருத்துவமனைகளையும் தீயிட்டு கொளுத்தி 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களைக்
கொன்றான்.
1227 (C.E.) ஜெங்கிஸ்கான் இறந்த பிறகு, அவரின் மகன்களால்
பேரரசு பிரிந்தது. பெர்ஷியாவை உள்ளடக்கிய பகுதிகள் இரண்டாம் கானித் பேரரசாக
உருவாகியது. மங்கோலியர்கள் தங்கள் பகுதிகளை ஈரோஷியாவில் தனுபே நதி வரை
வளர்த்தார்கள். மார்கோ போலோ என்னும் பிரசித்தி பெற்ற கடலாடி பயணி பெர்ஷியா வழியாக
சீனா சென்றார். இவரின் குறிப்பில் பெர்ஷியாவின் மங்கோலிய வெறியாட்டத்தைக்
குறிப்பிட்டிருந்தார்.
1207 (C.E.) ரூமி (மௌலானா) என்ற புகழ்பெற்ற பெர்ஷிய கவிஞர்
இருந்தார். இவரின் “மத்னவி” என்ற புத்தகம் சூஃபியிசம் என்ற கொள்கைகளைக் கொண்டதாக
இருந்தது. இவரின் பெற்றோர்கள் மங்கோலியர்களின் கொடுமைக்கு பயந்து அனடோலியாவில்
வாழ்ந்தனர். ரூமியின் சூஃபிச கொள்கை பரவலாக இஸ்லாத்தில் இருக்கிறது. இவரின்
கவிதைகள் உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. B.B.C. செய்தி நிறுவனம் உலகின் அதிகப்புகழ் வாய்ந்த
கவிஞர் என்று இவரைப் புகழ்கிறது.
1295 (C.E.) கஸன் கான் என்ற முதல் மங்கோலிய மன்னன் இஸ்லாமை
தழுவியதாக பெர்ஷிய வரலாறு கூறுகிறது.
1405 (C.E.) திமூர் (டேமெர்லேன்) என்ற துருக்கி மங்கோலிய
மன்னன் பெர்ஷியாவின் பல இடங்களைக் கைப்பற்றுகிறான். இவனும் பலரைக் கொன்றான்.
சம்ர்கண்டை தலைநகரமாக்கி அதை கலைஞர்களைக் கொண்டு அழகு படுத்தினான். இந்தியாவின்
டெல்லியில் 80,000 மக்களை பதற பதற தீயிட்டு கொளுத்தியது இன்றளவும் மறக்க
முடியாதது. அதிலிருந்து டெல்லி நகரம் மீளவே நூறாண்டுகளுக்கும் மேலானது.
டேமெர்லேனின் மறைவிற்குப் பிறகு, அவனின் சந்ததி நூறாண்டுகளுக்கும் மேலாக
பெர்ஷியாவின் சில பகுதிகளை ஆண்டது.
1501 (C.E.) ஒன்பது நூற்றாண்டுகளுக்கும் மேலாக அந்நிய
ஆதிக்கத்திலிருந்த பெர்ஷியாவை முதலாம் ஷா இஸ்மாயில் என்ற இஸ்லாமிய ஷியா பிரிவு
தலைவர் ஒன்றிணைத்தார். பரவலாக இருந்த இஸ்லாமிய சுன்னி பிரிவு மக்களை ஷியா
பிரிவுக்கு திருப்பி ஷியா கொள்கை நாடாக ஆக்கினார். அப்போதிருந்த சஃபாவித்
மன்னர்கள் இதை ஆதரித்தார்கள்.
1587 (C.E.) சஃபாவித் பேரரசில் ஷா அப்பாஸ் என்பவர் பலமான
இராணுவத்தை அமைத்து ஓட்டோமான்களை வீழ்த்தினார். ஈரானின் இஸ்ஃபஹானை
தலைநகரமாக்கினார். இஸ்ஃபஹானை கலை, கட்டிடங்கள் என்று புகழ்பெறச் செய்தார். பல
மசூதிகளையும், பள்ளிகள், பாலங்கள், கடை வீதிகள் என்று அமைத்தார். ஈரானில் கலையை
மிகவும் உச்சிக்கு கொண்டு வந்தார். ஒரே நேரத்தில் பெர்ஷிய கலைகளை சஃபாவித்கள்,
ஓட்டோமான் கள், இந்திய மொகலாயர்கள் பரப்பினார்கள். தாஜ்மஹாலின் அடிப்படை
வடிவமைப்பாளர் உஸ்தாத் இசாத் என்ற பெர்ஷியர் என்று கூறப்படுகிறது.
1722 (C.E.) ஆஃப்கானிலிருந்து
மஹ்மூத் கான் (மொகுல் கான்) என்பவர் படையெடுத்து பெர்ஷியாவின் இஸ்ஃபஹானைக்
கைப்பற்றி சஃபாவித்களின் பேரரசை முடிவுக்கு கொண்டுவந்தார். சஃபாவித்களின் நாதர் ஷா
என்பவர் ஆஃப்கானியர்களை விரட்டி, மீண்டும் பெர்ஷியாவை ஒருங்கிணைத்தார். இவரது
அபாரமான போர் திறமையால், ஓட்டோமான்கள், ரஷ்யர்கள், இந்தியர்கள் மற்றும் பல
பழங்குடியினர்களை வென்றார். இவர் மொகலாய இந்தியாவில் படையெடுத்த போது உலகின்
தலைசிறந்த சீ ஆஃப் லைட் என்னும் வைரத்தையும், தற்போது பிரிட்டிஷ் கிரீடத்தில்
இருக்கும் மவுண்ட் ஆஃப் லைட் என்னும் வைரத்தையும் கைப்பற்றினார். தனது சொந்த
பாதுகாப்பு படையினராலேயே கொல்லப்பட்டார். இவருக்குப் பிறகு, இவரது இராணுவம்
சிதறுண்டது.
1747 (C.E.) கரீம் கான் ஸண்ட் என்பவர் மத்திய தென் ஈரானைக்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இவர் ஷா என்னும் பாரம்பரிய பெயரை சேர்த்துக்
கொள்ளாமல் மக்களின் ஆட்சியாக்கினார். கஜார் என்னும் பழங்குடி எதிரிகளிடம்
சண்டையிட்டார். இவர் மறைவிற்குப் பின் அகா முஹம்மது கான் கஜார் என்பவர்,
கஜார்களின் ஆட்சியாக கஜார் பேரரசை நிறுவினார். இவர் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது.
நிர்வாகம் சீர் குலைந்தது. கஜார்களின் காலத்தில் ஓவியம், பளிங்கு கற்கள் மற்றும்
கட்டிடக்கலைகள் சிறந்து விளங்கின.
1813 (C.E.) ஆங்கிலேய மற்றும் ரஷ்யர்களின் ஐரோப்பிய
ஏகாதிபத்யம் ஈரானில் தலை தூக்கியது. கஜார்கள் குலிஸ்தான், துர்க்மன்சாய் போர்களில்
காகஸை (தற்போதைய ஜியார்ஜியா, அர்மேனியா, அஜர்பைஜான்) இழந்தார்கள். வெளிநாட்டு
சட்டங்கள் ஈரானியர்கள் மீது திணிக்கப்பட்டது.
1851 (C.E.) கஜார்கள் மத்திய ஆசிய பகுதிகளை ரஷ்யர்களிடமும்,
ஆப்கானிஸ்தான் பகுதிகளை பிர்ட்டிஷாரிடமும் இழந்தார்கள். இந்த இரு அன்னிய
சக்திகளும் ஈரானின் வாணிபத்தையும் (இன்றைக்கும் ஈரான் மிகப் பெரிய வாணிபம்
நடத்தப்படும் நாடு) உள்நாட்டு அரசியலையும் கட்டுப்படுத்தின. கஜார்கள் லஞ்சம்
பெற்றுக்கொண்டு விலைமதிக்கத்தக்க பலவற்றை பிரிட்டிஷார்களுக்கு விட்டுக்
கொடுத்தனர்.
1906 (C.E.) கஜார்களின் லஞ்ச லாவண்யத்தால் புரட்சி ஏற்பட்டு
ஈரானின் முதல் மஜ்லிஸ் பாராளுமன்றம் உதயமானது. தெற்கில் ரஷ்யாவும், கிழக்கில்
பிரிட்டனும் ஈரானைக் கட்டுப்படுத்தின. முதலாம் உலகப்போரின் முடிவில் ஈரான்
அரசியல், சமூக, பொருளாதாரத்தில் முற்றிலும் மூழ்கியது.
1921 (C.E.) ரேஸா கான் என்னும் இராணுவ அதிகாரி புரட்சி
செய்து முதல் மந்திரி ஆனார். அவர் ஷா என்னும் பட்டப்பெயரை சூட்டிக் கொள்ள
விரும்பினார். ஏறக்குறைய பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, ரேஸா ஷா தான்
சஸ்ஸானியர்கள் விட்ட இடத்திலிருந்து ஈரானை சீர்படுத்தினார். இவர் ஈரானின் முக்கிய
பேரரசாக விளங்கிய பஹ்லாவி பேரரசின் வழி வந்தவர். முதலில் இராணுவத்தை
நிலைப்படுத்தி, அனைத்து பழங்குடியினரையும் ஒன்று படுத்தினார். நவீன பள்ளிகள்,
கல்லூரிகள் கட்டினார். பெண்களை வேலைக்கு அமர்த்தினார். ஈரானில் முதல்
தொழில்புரட்சியை உண்டாக்கி பல சாலைகள், பாலங்கள், சொந்த தொழிற்கூடங்களை கொண்டு
வந்தார். முதல் ஈரானிய இரயில் போக்குவரத்தையும் துவங்கினார். அனைத்து வெளிநாட்டு
அலுவல்களிலும் பெர்ஷியா என்பதை நீக்கி ஈரான் என்று குறிப்பிடச் செய்தார். இரண்டாம்
உலகப்போரில் யார் பக்கமும் ஆதரவளிக்காமல் இருந்தார்.
1941 (C.E.) போருக்கான தளவாடங்களை இடம் மாற்ற ரஷ்யாவின்
கூட்டுப் படைகள் ஈரானின் இரயில் தட பகுதிகளை ஆக்கிரமித்தன. ஷா தனது மகன் முஹம்மது
ரேஸாவிடம் ஆட்சிப் பொறுப்பை விட்டு தென் ஆப்பிரிக்காவில் மரணமடைந்தார். ஈரானின்
கூட்டு நாடுகளின் மற்றும் அமெரிக்க நெருக்குதலாலும், சோவியத் ஈரானின் வடமேற்குப்
பகுதியை விட்டு விலகியது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஸ்டாலின் விட்டுக்கொடுத்த
முதல் பகுதி ஈரானாகும்.
1951 (C.E.) டாக்டர் மொஸ்ஸாடிக் என்பவர் ஈரானிய மஜ்லிஸ்
பாராளுமன்றத்தில் தேசிய எண்ணெய் வளத்தை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் விட்டார்.
சில பிரச்சினைகளில் பிரிட்டிஷ் தன் வசமிருந்த ஈரானின் ஸ்டெர்லிங்க் கணக்குகளை
முடக்கி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தீர்ப்பு ஈரானுக்கு
சாதகமாகியது. கோபமுற்ற பிரிட்டிஷ் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்தது.
பிரிட்டிஷின் ஈரானின் உள்நாட்டு புரட்சியின் மூலம் டாக்டர் மொஸ்ஸாடிக் அரசு
நீக்கப்பட்டு, ஷா பதவியில் வைக்கப்பட்டார். ஷா புதிய கொள்கையாக வெள்ளைப்புரட்சி
என்று நிலங்கள், தொழிலாளர் நலம், பெண்கள் முன்னேற்றம் என்று கொண்டு வந்தார்.
இவைகளை அயாத்துல்லாஹ் கோமெய்னி என்பவர் எதிர்த்தார். அவரை ஷா அரசாங்கம்
சிறைப்பிடித்தது. 19 திருத்தங்களில் 15 ஆண்டுகாலத்தில் 6 திருத்தங்களை
கொண்டுவந்தார்.
1973 (C.E.) ஈரானின் எண்ணெய் உற்பத்தி ஆண்டுக்கு 20
பில்லியன் டாலர்களை தந்தது. ஷாவின் எதிர்ப்பாளர்கள் அயாத்துல்லாஹ் கோமெய்னியின்
தலைமையில் ஒன்று சேர்ந்தனர். 1979 ல் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு, ஷா தூக்கி எறியப்பட்டார்.
பின் எகிப்தில் மரணமடைந்தார். புதிய இஸ்லாமிய ஆட்சி அரபு இஸ்லாமிய கூட்டாக
இருந்தது. ஈரானில் பஹ்லவி வழிவந்த மன்னர் முறை ஒழிந்து இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப்
ஈரான் என்று மக்களாட்சி தோன்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக