மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 23 ஆகஸ்ட், 2014

பஹாமனி ஆட்சி 1



பஹாமனி ஆட்சி என்பது 1347 லிருந்து 1527 வரை நீண்டிருந்தது. இது பஹாமனி சுல்தானேட் அல்லது பஹாமனி எம்பயர் என்று அழைக்கப்பட்டது. தென்னிந்தியாவில் பரந்து வடக்கில் டெக்கான் கிருஷ்னா நதி பகுதி வரை இருந்தது. சில சரித்திர ஆய்வாளர்கள் பஹாமனி ஆட்சி சௌலதாபாத் ( எல்லோரா குகை பகுதி) வரை முஹம்மது பின் துக்ளக் ஆட்சியில் இருந்ததாகக் கூறுகிறார்கள். 1347 ஆகஸ்டு 3 ல் துருக்கி கவர்னராக இருந்த அலாவுத்தின் ஹசன் பாஹ்மன் ஷா(ஹசன் கங்கு அல்லது அல்லாவுதீன் ஹசன்) என்பவர் டெல்லி சுல்தானாக இருந்த முஹம்மது பின் துக்ளக்கை புரட்சி மூலம் எதிர்த்து பஹாமனி ஆட்சி அமைத்தார். இவர் தஜிக் பெர்ஷியன் வழி வந்தவராக கருதப்படு கிறார். இவரின் புரட்சி வெற்றிபெற்று தற்போதைய கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வரை ஆட்சி பரவியிருந்தது. டெக்கான் பகுதியிலிருந்து தெற்கில் ஹிந்து விஜயநகரம் வரை அதிகாரம் பெற்றிருந்தார்கள். 1347 லிருந்து 1425 வரை முஹம்மதாபாதுக்கு (பிதார்) மாற்றும் வரை இவர்களின் தலை நகரம் அஹ்சனாபாதாக (குல்பர்கா) இருந்தது. 1466 லிருந்து 1481 வரை மஹ்முத் கவான் என்பவரது ஆட்சியில் பஹாமனி சுல்தானேட் மிகவும் உச்சத்தில் இருந்தது. 200 ஆண்டுகால ஆட்சியில் 18 மன்னர்கள் பஹாமனி சுல்தானேட்டில் ஆட்சி புரிந்தனர். 1518 ல் சுல்தானேட் நான்கு சிறு பகுதிகளாக பிதார், கோல் கொண்டா, அஹ்மதாபாத் மற்றும் பிஜப்பூர் என்று பிரிந்தது. ஆரம்பத்தில் பஹாமனி சுல்தானேட் விஜய நகரத்துடன் போர் புரிந்தது.
                                              பஹாமனி சுல்தானேட் வரலாற்றில் ஃபிரோஷ் ஷா என்பவரது ஆட்சி பெயர் பெற்றது. இவர் உலக அறிவைப் பெற்றிருந்தார். பஹாமனி சுல்தானேட்டை மத்திய இந்தியாவின் கலாச்சார மையமாக பெரிதும் விரும்பினார். மூன்று முறை விஜயநகரம் மீது போர் புரிந்தார். தனது எல்லையை வாராங்கல் வரை பரப்பினார். தனது ஆட்சியை சகோதரர் முதலாம் அஹ்மது ஷாவுக்கு வழங்கினார். வேளாண்மை துறை பஹாமனி சுல்தானேட்டில் முக்கியமானதாக இருந்து வருவாயைத் தந்தது. இவர்களில் டெக்கானிஸ் (பழையவர்கள்) மற்றும் அஃபக்விஸ் (புதியவர்கள்) என்று இரு பிரிவினர் இருந்தனர். இவர்களுக்குள் எப்போதும் கருத்து வேறுபாடு இருந்தது. மஹ்முது கவான் ஆட்சியை பரப்பினார். இவர் அஃபக்விசாக கருதப்பட்டதால் பழையவர்களின் நம்பிக்கையைப் பெற சிரமப் பட்டார். 1482 ல் இருபிரிவினரிடையே தோன்றிய கருத்து வேறுபாடால் முஹமது ஷா என்பவரால் 70 வது வயதில் கொல்லப்பட்டார்.
                                           பஹாமனி சுல்தானேட் பெர்ஷியா, துருக்கி மற்றும் அரேபியா விலிருந்து நவீன வேளாண்மை கலையை அறிமுகப்படுத்தினார்கள். வடக்கிலும், தெற்கிலும் கலாச்சாரம் ஓங்கி வளர்ந்தது. பஹாமனி சுல்தானேட் ஆட்சியின் கும்பஸ் மற்றும் சார்மினார் (ஹைதராபாத்) கட்டிடங்கள் சிறப்பு வாய்ந்தது. இந்திய இஸ்லாமிய கலை மற்றும் மொழி சிறப்பாக வளர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் இஸ்லாமிய கலாச்சாரம் வளர்ந்தது. 1321 லிருந்து 1422 வரை வாழ்ந்த சூஃபி குரு ஹஜ்ரத் பந்தே நவாஸ் அவர்களின் ஈடுபாடும் அதிகம். மஹ்முத் கவான் தனது சொந்த செலவில் சமர் கண்டிலும், கோரசானிலும் மதரஸா மற்றும் பல்கலைக்கழகங்களையும் உருவாக்கினார். பின்னாளில் வந்த குடிகார மன்னனால் தலை வெட்டிக் கொல்லப்பட்டார். குல்பர்கா பிரதேசத்திலிருந்து 1347 லிருந்து 1358 வரை அலாவுத்தின் ஹசன் பாஹ்மன் ஷாவும், 1358 லிருந்து 1375 வரை முதலாம் முஹம்மது ஷாவும் ஆண்டனர். குல்பர்கா கோட்டையில் ஜும்மா மஸ்ஜிதும், குல்பர்கா நகரில் ஷா பஸார் மஸ்ஜிதும் கட்டினார். விஜயநகரம், வாராங்கல் மீது போர் தொடுத்தார். கோட்டைகளும், யானைகளும், குதிரைகளையும் கோல்கொண்டா நகருடன் பெறப்பெற்றார். இவர் 1375 ல் அதிகமாக குடித்து மரணமடைந்தார்.
                               இவருக்குப் பிறகு, மகன் அலாவுதின் முஜாஹித் ஷா 1375 லிருந்து 1378 வரை தனது 19 வது வயதில் ஆண்டார். இவர் முபாரக்கான் என்பவரது மகன் மசூத்கானால் கொல்லப் பட்டார். பிறகு, தாவுத் ஷா ஆட்சிக்கு வந்தார். இவரும் அடிமை ஒருவனால் குல்பர்கா கோட்டை மசூதியில் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. 1378 லிருந்து 1397 வரை மஹ்முத் ஷாவின் மகன் இரண்டாம் முஹம்மது ஷா ஆட்சிக்கு வந்தார். பஹாமனி சுல்தானேட் ஆட்சியில் மிகவும் அமைதியான ஆட்சி இவருடையது தான். இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தனது மாமன் அஹ்மது கானின் மகன்கள் ஃப்ரோஷ் ஷா மற்றும் முதலாம் அஹ்மது ஆகிய இரு குழந்தைகளை தத்து எடுத்துக்கொண்டார். பிறகு, தஹ்மதன் ஷா என்னும் மகன் பிறக்க, டைபாயிட் எனும் கடுமையான காய்ச்சலில் இறக்கும் தருவாயில் தஹ்மதன் ஷாவே தனக்குப் பிறகு ஆள வேண்டும் என உத்தரவிடுகிறார்.
                                           அதன்படி 1397 ல் கியாசுத்தீன் தஹ்மதன் ஷா பதவிக்கு வருகிறார். டகால்சின் என்னும் துருக்கிய அடிமை பதவிக்கு ஆசைப்பட்டு, பெரிய விருந்து ஏற்பாடு செய்து ராஜா தஹ்மதன் ஷாவை அழைத்து கண்களைப் பிடுங்கி சாகர் சிறையில் அடைத்தான். பின் தனது ஒன்று விட்ட சகோதரன் இரண்டாம் ஷம்சுத்தின் தாவுத் என்பவனை பதவியில் அமர்த்தினான். தன்னை பதவியில் அமர்த்திய டகால்சினுக்கு ஒன்றும் செய்யாமல், இரண்டாம் ஷம்சுத்தின் தாவுத் தனது அடிமைத் தாயை “மக்துமா இ ஜஹான்” என்னும் சிறப்பிற்கு வைத்தான். சரியான சந்தர்ப்பத்தில் தர்பார் மண்டபத்திலேயே டகால்சினும், அவன் மகனும் இரண்டாம் ஷம்சுத்தின் தாவுத்தை தாக்கி அவன் கண்களைப் பிடிங்கி அவன் தாயாருடன் மக்காவுக்கு அனுப்பி விட்டனர். இரண்டாம் ஷம்சுத்தின் தாவுத் 1414 ல் மக்காவில் மரணமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.1397 லிருந்து 1422 வரை தாஜுத்தீன் ஃபிரோஷ் ஷா ஆட்சிக்கு வந்தார். இவர் மிகவும் புகழுக்குரியவர். சிறந்த கவிஞர். இவரின் உருஜி மற்றும் ஃபிரோஷி கவிதைகள் மிகவும் பெயர்பெற்றது. தௌலதாபாத் மலைத்தொடர்களில் இவர் துவங்கிய பலகாட் என்னும் வானிலை ஆராய்ச்சி மையம் முடிவதற்குள் இவர் மரணமடைந்து விட்டார். தனது சகோதரன் அஹ்மதுகானுடனான ஒரு போரில் தோல்வியுற்று 1422 ல் மரணமடைந்தார். மேற்சொன்ன அனைத்து மன்னர்களுக்கும் தலை நகரமாக குல்பர்கா விளங்கியது.
                                        பிதாரை தலைநகரமாகக் கொண்ட பஹாமனிகளின் ஆட்சி 116 ஆண்டுகளாக நடந்தது. 1422 லிருந்து 1436 வரை முதலாம் அஹ்மது ஷா (அஹ்மது ஷா அல் வலி பஹாமனி அல்லது ஷிஹாபுத்தீன் முதலாம் அஹ்மது) வின் ஆட்சி அமைந்தது. இவரது ஆட்சியில் ஹஜ்ரத் க்வாஜா சையத் முஹம்மது கெசு த்ராஸ் என்னும் மார்க்க அறிஞர் மரணமடைந்து முதலாம் அஹ்மது ஷாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர் குல்பர்காவிலிருந்து தலைநகரை பிதாருக்கு மாற்றினார். கலாஃப் ஹசன் பஸ்ரி என்பவரை பிரதம மந்திரியாக அமர்த்தினார். குல்பர்காவில் கெசு தராஸ் என்னும் கோபுரம் அமைத்தார். விஜயநகரம் மற்றும் விஜயராயா மீது போர் தொடுத்தார். நோய்வாய் பட்டு தான் மரணிக்கும் முன் தனது மூத்த மகன் அலாவுத்தீன் ஸ்ஃபர் கானிடம் ஆட்சிப் பொருப்பை ஒப்படைத்தார். கலைகளில் மிகவும் ஆர்வமுள்ளவராக இருந்தார். இரானிய தேசத்திலிருந்து பொன், வெள்ளியில் துத்தநாகத்தை திறம்பட இணைக்கும் அப்துல்லா பின் கைய்சர் என்னும் கலைஞரை வரவழைத்தார். முதலாம் அஹ்மது ஷா மற்றும் இவரது மனைவியின் அடக்கவிடம் பிதார் மாவட்டத்தில் அஷ்தூர் கிராமத்தில் இருக்கிறது. ஆண்டுதோறும் உர்ஸ் என்னும் விழா எடுக்கும் வைபவம் இங்கு நடைபெறு கிறது.

கருத்துகள் இல்லை: